“இந்து – பௌத்த மோதலை உருவாக்குவது எனது எண்ணமில்லை” – ஞானசாரர் விளக்கம்

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் மோதலை ஏற்படுத்த நாம் ஒருபோதும் நினைக்கவில்லை என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவை மீறி, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடலை தகனம் செய்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “இந்து பௌத்த மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எம் மத்தியில் இல்லை.

கொழும்பில் உள்ள ஏனைய சிங்கள பகுதிகளில் வாழும் தமிழ் – சிங்கள மக்கள் மிகவும் நல்ல உணர்வுடன் ஆலய மத நடவடிக்கைகளை முன்னெடுத்து ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரம் அந்த நிலை இல்லாது பௌத்தம் புறக்கணிக்கப்பட்டு அரசியல் தூண்டுதல்களினால், இனவாதம் மற்றும் அரசியல் சுயநலம் காரணமாக முரண்பாடுகள் ஏற்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதுமட்டுமல்ல அந்த பகுதி விகாரைக்கு உரித்தான பகுதி. இந்துக்களுக்கு அந்த இடத்தில் உள்ள உரிமை போன்றே பௌத்தர்களுக்கு உரிமை உள்ளது.

மேலும் அவரது உடலை நாம் உரிய இடத்திலேயே தகனம் செய்தோம். அத்தோடு நாம் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பு வர தாமதமானத்தினாலேயே உடலை தகனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இது ஒருபோதும் இந்து – பௌத்த மோதலாக பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது” என கூறினார்.

Related Posts