முல்லைத்தீவு- மல்லாவியைச் சோ்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

மல்லாவியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதனின் மகனான துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
2009 ஜனவரி 20ஆம் திகதி சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார்கோவில் அருகாமையில் இடம்பெற்ற படையினரின் எறிகணைத்தாக்குதலில் துசாபனின் தந்தையார் பத்மநாதன் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவர் கொல்லப்பட்டிருந்தனர்.
போரின்போது கண்முன்னே கண்ட அவல காட்சிகள் துசாபனின் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.
இதனையடுத்து, போர்க் காலப்பகுதியில் கைகளை இழந்தவர்களுக்காக செயற்கை கைகளை உருவாக்கும் முயற்சியில் துசாபன் ஈடுபட்டு வந்தார். அவரின் முயற்சி வீன்போகவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி அவர் சாதனை படைத்துள்ளார்.
தனது கல்வி முடிவுறும் நேரத்தில் கைகளை இழந்தவர்களுக்கு சென்றடையும் வகையில் இவ்வாறு செயற்கை கைகளை செய்துகொடுக்க இருப்பதாகவும் மிகக்குறைந்த விலையில் அதனை எவ்வாறு செய்ய முடியும் என தற்பொழுது ஆராய்ந்து வருவதாகவும் துசாபன் தெரிவித்துள்ளார்.