Ad Widget

சுனாமி பேரழிவுக்கு இன்றுடன் 14 ஆண்டுகள்

இலங்கையில் சுனாமி ஏற்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களை நினைவுக்கூரும் முகமாக, உயிரிழந்தவர்களுக்காக பொதுமக்கள் அனைவரும் இன்று இரண்டு நிமிடங்கள் மௌனஞ்சலி செலுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

தேசிய பாதுகாப்பு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு சுனாமி என்ற பேரலை ஏற்பட்டு 14 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகளும் மத அனுஷ்டானங்களும் இடம்பெறுகின்றன.

மத அனுஷ்டானங்களுக்கும் அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்குமே இன்று முன்னுரிமை அளிக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நிகழ்வு காலி மாவட்டத்தில் பெரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்னால் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் பிரதம அதிதியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலந்துகொள்ளவிருப்பதுடன், பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் தேசிய நிகழ்வு நடைபெறவுள்ளது.

சகல அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களிலும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.

Related Posts