மர்ம காய்ச்சலால் யாழ்.மாணவன் உயிரிழப்பு

யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவனொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் விதுர்சன் (வயது 14) என்ற மாணவன் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி இரவு மீண்டும் காய்ச்சல் அதிகரித்துள்ளது. அதனை அடுத்து, குடும்பத்தினர் அவரை சங்கானை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இருப்பினும் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் யாழ்.சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளதாவது, “மாணவன் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்தார்.

மேலும் மாணவனுக்கு ஏற்பட்ட காய்ச்சல் எதுவென கண்டறியப்படவில்லை. அதனால் மாணவனின் குருதி மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னரே மேலதிக விபரம் தெரியும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts