சமஷ்டி முறைமையைச் சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இதுவரையான காலப்பகுதியில் நான் சிங்களப் பிரதேசங்களில் சமஷ்டி குறித்து பேசியபோதெல்லாம் அதற்கு ஆதரவாகவே சிங்கள மக்களின் தரப்பிலிருந்து அவர்களின் கருத்துக்கள் வெளிப்பட்டிருந்தன.
சமஷ்டி முறைமையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா எனவும் கண்டியத் தலைவர்களும் இலங்கைக்கு பொருத்தமானது சமஷ்டி முறையே எனக் கூறியிருந்ததையும் நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிங்கள மக்களிடையே எடுத்துக் கூறியிருக்கின்றேன்.
எனவே சிங்களவர்கள் வேண்டும் என்று கூறியிருந்த சமஷ்டி சிங்கள மக்களுக்கு எதிரானதாக இருக்காது என்ற கருத்தினை நான் தெளிவாகப் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியிருக்கின்றேன்.
எனவே இவ்வாறான நிலைமையில் சிங்கள மக்கள் சமஷ்டி முறைமையை ஓர் பூதாகாரமான விடயமாக எடுத்துக் கொள்வார்கள் எனவும் நான் எண்ணுகின்றேன்.
இதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அரசியலமைப்புப் பேரவையின் கூட்டமொன்றை நடத்துவதென்றும், இதில் இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் முழுமையான வரைபை நிபுணர்கள் தயாரித்த வரைபாகச் சமர்ப்பிப்பதென்றும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.