தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலையிலுள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பொதுமக்கள் சென்று பூசை வழிபாடுகளில் ஈடுபட தொல்பொருள் திணைக்களத்தால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து சற்றுதொலைவில் அமைந்துள்ளது வெடுக்ககுநாரி மலை. குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய லிங்கம் காணப்படுவதுடன் ஒவ்வோரு வெள்ளிக்கிழமையும் அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரமளவில் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வழிபாட்டிற்கு அனுமதியளிக்க முடியாது என நெடுங்கேணி பொலிஸ் நியத்திலும் தொல்பொருள் திணைக்களத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது எதிர்பை வெளியிட்டதுடன், இது தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரிற்கும், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
கடந்த சில தினங்களாக தமிழரின் பூர்விக பகுதிகளை தொல்பொருள் திணைக்களம் மற்றும், வனவள திணைக்களம் சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக கடந்த மன்னார் மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய குறித்த விடயங்களுடன் தொடர்புடைய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், ஜனாதிபதியுடனும் கலந்துரையாடுவதற்கும் மன்னார் ஒருங்கிணைப்பு குழுவில் முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.