வடமாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோமென இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, இவ்வாறு செயற்படுவதாக அவர் அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
“சில ஊடகங்கள் மக்கள் மத்தியில் இராணுவத்தினர் தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்பிவருகின்றன. எனினும், இராணுவம் மீதான நம்பிக்கையினைக் கைவிடவேண்டாம். இதுவரை காலமும் இராணுவத்தின் சேவைகள் மற்றும் செயற்பாடுகள் நாடுமுழுவதும் எவ்வளவு நேர்த்தியாக இடம்பெற்றதோ அவ்வாறே தொடர்ந்தும் காணப்படும்.
வடக்கு மாத்திமன்றி நாட்டின் எந்தவொரு இராணுவ முகாமையும் மூடுவதற்கு நாம் தீர்மானிக்கவில்லை. இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எந்தவொரு தீர்மானத்தினையும் இராணுவம் மேற்கொள்ளாது” என அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.