கோட்டாபய ராஜபக்ஷவை ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் நான் விசாரணை செய்தேன்!! – சுமந்திரன்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தவேண்டுமென நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் அந்த விசாரணைகள் நடப்பதில் சிலருக்கு விருப்பமில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சிலருக்கு கொல்லப்பட்ட சில ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் விசாரிக்க விருப்பமில்லை. ஏனெனில் அவர்கள் இப்போது எங்களுடன் தானே இருக்கின்றார்கள் எனும் ஆதங்கம் உண்டு.

ஆனால் எங்களுடன் நின்றாலும் எழுக தமிழுடன் நின்றாலும் உண்மை கண்டறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும்.

லசந்த படுகொலையின் பின்னர் அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வெளியேறிவிட்டனர். எனவே சட்டத்தரணிகள் இல்லாத நிலையில் என்னிடம் வந்தார்கள். நான் வழக்கில் ஆஜரானேன்.

அப்போது முதல் வழக்குத் தவணையில் முன்னிலையாகிய பின்னர் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் என் படத்தையும் என்னுடன் முன்னிலையான இளம் சட்டத்தரணிகளின் படங்களையும் வெளியிட்டு “கறுப்பு கோர்ட் போட்ட துரோகிகள்” என கட்டுரை எழுதியிருந்தார்கள்.

அதற்குச் சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும் அந்தச் செய்தியினை இரண்டு வாரத்தின் பின்னரே நீக்கினார்கள்.

லசந்தவின் அந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் நான் குறுக்கு விசாரணை செய்தேன். ஆனால் அது தொடர்பில் எந்த செய்தியும் பிரசுரிக்கப்படவில்லை” என அவர் தெரிவித்தார்.

Related Posts