யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ள அமர்வின் முதல் அங்கமாக மாநகர மேயர் மற்றும் துணை மேயர் தெரிவுகள் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான வாக்கெடுப்புகள் ஆரம்பமாகவுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்று யாழ். மாநகர சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் முதலாவது கூட்டமாக இது அமையவுள்ளது.
வடக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் அறுதிப்பெரும்பான்மை இல்லாததால், மாநகர முதல்வர் தெரிவு தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக 16 ஆசனங்களை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு மேயர் பதிவிக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்டை முன்மொழிந்துள்ள அதேவேளை, 13 ஆசனங்களை கொண்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது தரப்பில் மணிவண்ணனை அப்பதவிக்கு முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.