நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு தேசத் துரோகி எனத் தெரிவித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்களுக்கு மண்ணை அள்ளித் தூற்றியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கதறி அழுது ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.


இறுதி யுத்தத்தின்போது படையினரிடம் கையளித்தும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 324 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்கள் பொறிக்ப்பட்ட பதாதைக்கு முன்பாக கதறியழுத காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களைக் காட்டி இவர்கள் துரோகிகள் எனக் காட்டி அவர்களின் படங்களுக்கு மண் அள்ளி துவி சாபமிட்டு கதறியழுதனர்.
இதேவேளை பதாகையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களுக்கு அடித்தும் அதற்கு முன்பாக இருந்து ஒப்பாரி வைத்த தாய்மார் இவர்களாலேயே தமது பிள்ளைகள் வெளிவராமல் உள்ளனர் எனவும் தெரிவித்ததுடன் ஜனாதிபதியின் சந்திப்பின்போது சுமந்திரன் எம்.பி குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் சுமந்திரன் ஒரு துரோகி எனவும் தெரிவித்து கதறி அழுததுடன் பல தாய்மார்கள் மயக்கமுற்று விழுந்தனர்.
இந்நிலையில் நேற்றய பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்ட நிலையில் தமது பிள்ளைகள் வருவார்களா என்ற ஏக்கத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.