காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதில் கூறுவதற்கு ஒருமாத கால அவகாசம் தேவை!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதில் கூறுவதற்கு, ஒருமாத கால அவகாசம் தனக்கு தருமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், 38ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புபோராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையில் வடக்குக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வவுனியாவில் இரத்த வங்கி மற்றும் மாமடுவில் சிறுநீரக நோய் சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்ததன் பின்னர், காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட ஸ்தலத்துக்கு வந்திருந்தார்.

சுகாதார அமைச்சருடன் வட மாகாண ஆளுநர், வடக்கு சுகாதார அமைச்சர் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் உட்பட பலரும் வந்திருந்தனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தமது கோரிக்கைகளை அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் முன்வைத்ததுடன், அதிகளவானோர் இறுதி யுத்தத்தின் போது இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வருகை தரும்போது ஓமந்தைச் சோதனைச்சாவடியில் வைத்தே இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் காணாமல் ஆக்கப்பட்ட முறைகள் தொடர்பாக தாய்மார் தமது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தனர்.

அவர்களின் கருத்துகளைச் செவிமடுத்த அமைச்சர், இவை தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை தன்னிடம் வழங்குமாறும் அதனை வைத்து தான் உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்ததுடன், தனக்கு ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை, வடக்கு சுகாதார அமைச்சர் ஊடாக தன்னிடம் கையளிக்குமாறும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், தம்மிடம் உடனடியாக வவுனியா மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் உள்ளதாகவும் அதனை ஒரு வார காலத்தில் கையளிப்பதாகவும் தெரிவித்திருந்ததுடன் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு ஆவன செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், அரசியல் கைதிகளில் சிலரை, புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் விடுவித்துள்ளதாகவும் மேலும் சிலரை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டாலும் அவர்கள் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டியுள்ளவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிப்பதாகவும் ஏனையவர்களை சட்ட திட்டங்களை ஆராய்ந்து விடுவிப்பதாகவும் தெரிவித்ததுடன், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் தெளிவு படுத்தியிருந்தார்.

Related Posts