ஈ.பி.டி.பி அல்ல யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்றயதினம் கிளிநொச்சியில் நடைபெறுகின்ற காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூன்று அமைப்புக்கள் வருகை தந்திருந்தன.
இந்நிலையில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமாரிடம் ஊடகவியலாளர்களால் தொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
நீங்கள் முன்னர் ஈ.பி.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சிலரால் ஈ.பி.டி.பி யும் தொடர்வுபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது இது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கு அவர் பதில் அளிக்கையில்…
ஈ.பி.டி.பி கட்சியில் நான் இப்பொழுது இல்லை. ஆகவே ஈ.பி.டி.பி சார்பாக என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால் ஈ.பி.டி.பி யில் இருந்தவர்கள் அவ்வாறான விடயங்களில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். என்று நான் ஈ.பி.டி.பி யில் இருந்த காலத்தில் இருந்தே வலியுறுத்தி வந்திருக்கின்றேன்.
எனவே அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஈ.பி.டி.பி சில மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டது தொடர்பாக இப்பொழுது நீதிமன்றத்தில் பல வழக்குகள் நடக்கின்றது. சிலர் தண்டனையும் பெற்றிருக்கின்றார்கள்.
அது சட்டரீதியாக அணுகப்பட்டு யார் பிழை செய்திருந்தாலும் தவறுவிட்டதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப் படவேண்டும் என்பதில் எந்தவிதமாக மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்தார்.