ஊர்காவற்துறை பெண் படுகொலை: சாட்சிக்கு மீண்டும் கொலை அச்சுறுத்தல்

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான வாய் பேச முடியாத சிறுவனுக்கு மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஏழு மாத கர்ப்பிணியான 27 வயதையுடைய ஞானசேகரன் ஹம்சிகா எனும் பெண் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான 12 வயதையுடைய வாய் பேச முடியாத சிறுவன், பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தான். இதனையடுத்து குறித்த சிறுவனுக்கு இனம் தெரியாதவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சிறுவனின் தாயார் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், கடந்த 22ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் 16 பேர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது, இரண்டு பேரை குறித்த சிறுவன் அடையாளம் காட்டினான்.

இதனையடுத்து மீண்டும் கடந்த 22ஆம் திகதி மாலை மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அருகில் வந்த இருவர் தனது மகனை அழைத்து அச்சுறுத்தல் விடுத்ததாக சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மகனை தற்போது உறவினர் வீட்டில் பாதுகாப்பு நிமித்தம் தங்க வைத்துள்ளதாகவும் தனது மகனின் உயிரை பாதுகாக்கும் பொருட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் சேர்ப்பதற்கு விரும்புவதாகவும் சிறுவனின் தாய் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts