ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்தார் மனித உரிமை ஆணையாளர்!

பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறீலங்கா அரசாங்கம் மெதுவாகவே செயற்படுகின்றது என ஐநா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கவலை வெளியிட்டுள்ளார்.

டாவோசில் கடந்த மாதம் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில், மாநாட்டின் ஒருபக்க நிகழ்வாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைனைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியிருந்தார்.

இச்சந்திப்பின்போது சிறீலங்காவின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாகப் பேசப்பட்டது. இச்சந்திப்பில் சிறீலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் ஐநாவுக்கான சிறீலங்காப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்பின்னர் கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பாக, கலந்தாய்வு செயலணியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களை வரவேற்றுள்ளார்.

“அதேவேளை, பல்வேறு விடயங்களில், குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயங்களில் மெதுவான முன்னேற்றங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளமை குறித்த எனது கவலையை வெளியிட்டேன்.

இதுவும், கரிசனைக்குரிய ஏனைய விவகாரங்களும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் நான் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் பிரதிபலிக்கும் என்றும் சிறிலங்கா பிரதமருக்குத் தெரிவித்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Related Posts