சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜின் தீர்ப்பு உறுதி செய்கிறது-சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜ் படு கொலை சம்பவத்தின் தீர்ப்பு உணர்த்தியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நீதித்துறையில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடையாது என்ற செய்தி இதன் மூலம் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து சந்தேகநபர்களும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் நிறைவை மிக உற்சமாக கொண்டாடவுள்ள நிலையில் சிங்கள பௌத்த பேரினவாதம் தெளிவான செய்தியை கூறியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரவிராஜின் படுகொலை மூலம் ஈழத் தமிழர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு வழங்கப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

இந்த கொலை தொடர்பில் எந்தவொரு குற்றவாளிகளையும் கண்டறிய தவறிய அரசாங்கம், அனைத்து சந்தேகநபர்களையும் தற்போது விடுவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts