Ad Widget

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்க ஏற்பாடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா தாயக அலுவலகத்தில் நேற்று இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை இம்முறை அனைத்து மக்களையும் திரட்டி உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி மாலை 4 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ளது. அன்று காலை 6 மணி தொடக்கம் 8 மணி வரையான காலப்பகுதிக்குள் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதஸ்தலங்களிலும் போரில் இறந்த அனைத்து மக்களுக்காகவும் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும், பொது அமைப்புகள் மற்றும் ஏனைய கட்சிகளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு போரில் இறந்த அனைவருக்காகவும் பிரார்த்தனையில் ஈடுபட கலைமகள் விளையாட்டு மைதானத்திற்கு வருமாறும் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts