அரசியல் தீர்வு தொடர்பாக சில முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த தீர்வு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள கூடியவகையில் அமைய வேண்டும். தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வை, நாம் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபை உறுப்பினர்களுக்கும், இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் தெரிவித்த இரா. சம்பந்தன், நாம் இன்றொரு முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் சர்வதேசமும் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எங்களுடைய ஒற்றுமை மிகமிக முக்கியமானதாகும். நாம் எமது ஒவ்வொரு நகர்வையும் மிகவும் அவதானத்துடன் முன்னெடுக்க வேண்டும். எனவே சமகால அரசியலில் இடம்பெற்றுவரும் தமிழர்கள் தொடர்பான விடயங்களில் தமிழ் தரப்பினர் அனைவரும் ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் இணைந்து செயற்பட்டு அந்த இலக்கை எட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.