நுணாவில் பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளார். சிவில் உடையில் வெள்ளைவானில் சென்ற நான்கு பேர் தனது கணவனை கடத்திச் சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கடத்தியவர்கள் தங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் என கூறியதாகவும் மனைவி கூறினார்.
சாவகச்சேரியில் கடந்தவாரம் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என சிவில் உடையில் சென்ற அந்த நான்கு பேரும் கூறினர். கடத்தியவர்கள் தொலைபேசி இலக்கம் ஒன்றை வழங்கினார்கள். அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு யாழ் நகரில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றுக்குச் சென்றபோது அங்கு சிவில் உடையில் சிலர் நின்றனர். ஆனால் அந்த வீடு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பணியாற்றுவதற்கான அலுவலகமாக தெரியவில்லை என கூறிய கடத்தப்பட்டவரின் மனைவி, அங்கு நின்றவர்கள் அந்த கடத்தலுக்கும் தமக்கும் தொடர்பு இல்லையென தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை சட்டத்தரணிகளுடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர்கள் எடுத்த முயற்சியினால் கடத்தப்பட்ட தனது கணவர் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அறிந்துள்ளதாகவும் மனைவி கூறினார். சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தின் பின்னர் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கைதுகள் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.