Ad Widget

இரசாயன உரத்தைப் பயன்படுத்தாமல் தெல்லிப்பழையில் இயற்கை விவசாயம்!

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மானிடம் இயற்றை விவசாயப் பண்ணையை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் பார்வையிட்டதுடன் இதுபோன்ற இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் இராசாயன உரம் மற்றும் கிருமிநாசினிகளின் தாக்கத்தினால் மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் விவசாயத்திற்கு இரசாயனத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று பலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் விவசாயிகள் தொடர்ந்தும் அவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ப.நந்தகுமார் எடுத்த நடவடிக்கையின் பயனாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகாமையில் உள்ள காணியில் இயற்கை விவசாயப் பண்ணை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மானிடம் அறக்கட்டளையும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள தாய்மார் கழகமும் இணைந்து இதனை அமைத்துள்ளன.

இங்கு மரக்கறிப் பயிர்கள், சோளன், மரவள்ளி, கீரை உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் செய்கை பண்ணப்பட்டுள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் தினமும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. இந்தப் பண்ணைக்கு அறக்கொடையாளர் இ.செல்வநாயகம் குறிப்பிட்டளவான காணியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

கடந்த புதன்கிழமை தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைத் திறப்புவிழாவுக்கு சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்டோர் இதனைச் சென்று பார்வையிட்டனர். அன்றைய தினம் குறித்த நிகழ்வுக்குச் சென்றவர்கள் இங்கு மரக்கறிகளைக் கொள்வனவு செய்து சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. இதேவேளை, இந்தப் பண்ணையை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதை முன்னுதாரணமாகக்கொண்டு விவசாயிகள் இரசாயன உரம் பயன்படுத்தாமல் விவசாயச் செய்கையில் ஈடுபட முன்வரவேண்டும் என்றும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts