ஒரு மணித்தியால உடற்பயிற்சியின் போது 24 மணி நேரத்துக்கு போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சக்கர உபகரணமொன்றை இந்திய நிறுவன மொன்று வடிவமைத்துள்ளதாக பிரித்தானிய டெய்லி மெயில் ஊடகம் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
பிறீ எலெக்றிக் வண்டி என அழைக்கப்படும் மேற்படி உபகரணம் மனித சக்தியிலிருந்து மின் சக்தியை பிறப்பிக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது என லிவிங் எஸென்ஸல் என்ற மேற்படி நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி மனோஜ் பர்கவா தெரிவித்தார்.
இந்த உபகரணத்தின் மிதி பலகையை மிதித்து ஒருவர் உடற்பயிற்சி செய்யும் போது அவரது சக்தி வீணடிக்கப்படாமல் ஒரு நாளுக்குப் போதுமான மின்சக்தியாக மாற்றப்படுகிறது என அவர் கூறினார். மேற்படி உபகரணத்தின் மூலம் ஒரு தடவை பிறப்பிக்கப்படும் மின்சக்தியைப் பயன்படுத்தி ஒரு கையடக்கத்தொலைபேசி, ஒரு டப்லட் கணினி, மின்விசிறி என்பவற்றை ஒரேசமயத்தில் மின் ஏற்ற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த உடற்பயிற்சி சக்கர உபகரணம் எதிர்வரும் மாதம் முதல் இந்தியாவெங்கும் பாவனைக்குவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.