புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான மக்கள் அபிப்பிராயம் பெறும் குழு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலதரப்பட்டோரிடமிருந்தும் முன்மொழிவுகளைப் பெற்று வருகின்றனர்.
அந்தவகையில் நேற்றய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் 18 விடயங்களை உள்ளடக்கியதான முன்மொழிவுகள் அரசியலமைப்பு மாற்றம் தெடார்பான மக்கள் அபிப்பிராயம் பெறும் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
1. அரசின் தன்மை
இலங்கை அரசு சுதந்திரமானதும், ஐக்கியமானதும்,இறைமை உள்ளதுமானதாக அமைதல் வேண்டும். அதன் அதிகாரங்கள் மத்திக்கும் பிராந்திய அலகுகளுக்கிடையில் பகிரப்படுதல் வேண்டும்.அதிகாரப் பகிர்வானது சமஷ்டி அடிப்படையில் அமையவேண்டும். வடக்கு கிழக்கைதவிர்ந்த ஏனைய பிராந்திய அலகுகளுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வுதேவையற்றது என்று கருதப்படுமாயின் சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு முறை
(Asymmetric Devolution) கருதப்படலாம்.
பிராந்திய அலகுகளில் வாழும் சிறுபான்மையின சமூகங்களின், குறிப்பாக இணைந்த வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் மத்திய மாகாணத்தில் வாழும் மலையக தமிழர்களுக்கும்,அவர்களுடைய கலை கலாச்சாரம் மற்றும் அவர்களுடைய இன மொழி அடையாளங்களை பேணிப் பாதுகாக்கும் வகையில் அகச் சுயாதீக்கம் உடைய அலகுகள் ஏற்படுத்தப்படல் வேண்டும். மதச்சார்பற்ற அரசு அமையவேண்டும். அதேபோல்
தேசியக் கொடியானது, பன்முகத் தன்மையை பாதுகாப்பதாகவும், பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும்.
2. இறைமை
இறைமை மக்களிடம் இருப்பதும் கைமாற்றமுடியாததுமாகும். இது ஆளுகை, அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை சார்ந்த அதிகாரங்களை உள்ளடக்குதல் வேண்டும். மக்களின் சட்டவாக்க அதிகாரம் பாராளுமன்றம், பிராந்திய அலகுகள் உள்ளூராட்சி சபைகள், சர்வசன வாக்கெடுப்பு ஆகியவற்றின் மூலம் பிரயோகிக்கப்படல் வேண்டும். நிறைவேற்று அதிகாரம் சுயவிருப்பின் படி அல்லது பிரதம மந்திரியினதும் அமைச்சரவையினதும் ஆலோசனையின் படி ஜனாதிபதியினாலும், பிராந்திய அலகுகளில் முதலமைச்சரினதும் அமைச்சரவையினதும் ஆலோசனையின் படி பிராந்திய அலகின் ஆளுநராலும் பிரயோகிக்கப்படல் வேண்டும். (ஜனாதிபதிக்கு தேசிய பாதுகாப்பு,வெளிநாட்டலுவல்கள், அனர்த்த முகாமைத்துவம் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட விடயங்கள் மட்டுமே சுய விருப்பத்தின்படி செயற்படுவதற்கு ஏற்ப இருக்கவேண்டும்.) நீதிச்சேவை அதிகாரம் ஸ்தாபிக்கப்பட்ட நீதிச்சேவை நிறுவனங்கள் மூலம் பிரயோகிக்கப்படல் வேண்டும். அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும்
பாதுகாப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
3. அடிப்படை உரிமை
வாழ்வதற்கான உரிமைகள், கல்வி, சுகாதார மருத்துவ வசதிகளிற்கான உரிமை மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய உரிமை என்பனவும் அடிப்படை உரிமைகளாக உள் வாங்கப்படல் வேண்டும். அரசுக்கு எதிராக
அடிப்படை உரிமைகள் மீறல்கள் தொடர்பான வழக்கு தாக்கல் செய்வதற்கான உரிமை போல தனியார் நிறுவனங்களுக்கு எதிராகவும் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தொடரக் கூடியதாக இருத்தல் வேண்டும். அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு குறைந்தது ஒரு வருடமாக இருக்க வேண்டும். (தற்சமயம் அது ஒரு மாதமாக உள்ளது).சூழல் பாதுகாப்பு ஓர் அடிப்படை உரிமையாகத் கருதப்பட்டு அதனை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க சட்டவாக்கல் செய்யப்படல் வேண்டும்.
4. அதிகாரப்பகிர்வு அலகுகள்
இணைந்த வடக்கு கிழக்கு ஒரு பிராந்திய அலகாகவும் ஏனைய பிரதேசங்கள் மீள் நிர்ணயம் செய்யப்பட்ட பிராந்திய அலகுகளாகவும் இருக்கலாம். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக இரண்டு மாகாணங்களுக்கிடையேயும் தனித் தனியே அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றினை
நடாத்தலாம்.
5. அதிகாரப்பகிர்வு அலகுகளின் அதிகாரங்கள்
5.1 சட்டவாக்க அதிகாரம்
பிராந்திய அலகின் பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாக
சட்;டமியற்றும் தனியுரிமை (Exclusive Power) அதிகாரம் ஒவ்வொரு பிராந்திய
அலகுகளுக்கும் இருத்தல் வேண்டும்.
5.2 நிறைவேற்று அதிகாரம்
பிராந்திய அலகுகளுக்குரிய விடயங்கள் தொடர்பான
நிறைவேற்று அதிகாரம் முதலமைச்சரினதும் மாகாண அமைச்சரவையினதும் ஆலோசனையின்
படி ஆளுநரினால் பிரயோகிக்கப்படல் வேண்டும்.
5.3 நீதிச்சேவை அதிகாரம்
பிராந்திய அலகுகளினால் இயற்றப்படும் சட்டங்களும்,
வரயறைச் சட்டங்களும் அரசியலமைப்புக்கு அமைவானவையா என்பதை
தீர்மானிப்பதற்கும், பிராந்திய அலகுகளுக்கு இடையிலான மற்றும் பிராந்திய
அலகுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலானவையுமான கருத்து வேறுபாடுகள்
தொடர்பான விண்ணப்பங்களை விசாரித்து தீர்ப்பளிப்பதற்கும் அரசியலமைப்பு
நீதிமன்றம் ஒன்று இருத்தல் வேண்டும். சகல பிராந்திய அலகுகளிலும்
மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று ஏற்படுத்தப்படல் வேண்டும். இம்
மேன்முறையீட்டு நீதிமன்றம் பிராந்திய அலகுகளுக்குள்ளான மேன்முறையீடுகளை
விசாரிப்பதுடன் அப் பிராந்தியத்துக்குட்பட்ட அடிப்படை உரிமை மீறல்களை
விசாரிப்பதற்கும் அதிகாரம் உள்ளதாக இருத்தல் வேண்டும். பிராந்திய
அலகுகளுக்கும் உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் தொடர்பான ஆட்சேபனை
மனுக்களை விசாரிப்பதற்கும் இம்மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு
அதிகாரமளிக்க வேண்டும்.
6. நிதி அதிகாரம்
நாட்டின் வருமானத்தை மத்திக்கும், பிராந்திய
அலகுகளுக்கும் இடையே பகிர்தல் மற்றும் பிராந்திய அலகுகளுக்கிடையே பங்கீடு
செய்தல் பற்றிய சிபார்சுகளைச் செய்வதற்கு மத்திய நிதி ஆணைக்குழுவிற்கு
அதிகாரமளித்தல் வேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும்
வகையில் மத்திக்கும் பிராந்திய அலகுகளுக்கும் வருமானத்தைப் பகிர்தல்
தொடர்பான பிரமாண சூத்திரங்கள் (Criteria) தயாரிக்கப்படல் வேண்டும். நிதி
ஆணைக்குழுவின் சிபார்சுகள் அரசினால் பின்பற்றப்படல் வேண்டும் என்ற
ஏற்பாடு இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பிராந்திய அலகுகளுக்கும் திரட்டிய
நிதி இருக்க வேண்டியதோடு அவ்வலகுகள் அத்திரட்டிய நிதியின் பேரில்
உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் கடன்பெறக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
7. நிர்வாக ஏற்பாடு
மாகாணத்தின் பிரதம செயலாளரும் அமைச்சர்களின்
செயலாளர்களும் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரினால்
நியமிக்கப்படுதல் வேண்டும். மாகாண உத்தியோகத்தர்களின் நியமனம்,
இடமாற்றம், பதவி நீக்கம் மற்றும் ஒழுக்காற்று கட்டுப்பாடு ஆகியவை
பிராந்திய அலகுகளின் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்குரிய விடயங்களாக அமைதல்
வேண்டும்.
இலங்கை நிர்வாக சேவை, பொறியியலாளர் சேவை, கணக்காளர் சேவை, திட்டமிடல்
சேவை, விஞ்ஞான அதிகாரிகள் சேவை, மருத்துவ அதிகாரிகள் சேவை போன்ற விசேட
தகைமைகள் சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் யாவும் அந்தந்த பிராந்திய சபை
அலகுகளின் கீழ் அமைதல் வேண்டும்.
பிரதேச செயலாளர்கள் மாகாண நிர்வாக சேவையின் கீழ் கொண்டு வரப்படுதல் வேண்டும்.
ஒதுக்கப்பட்ட பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளை மத்தி
நேரடியாக அல்லது அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் ஊடாக
நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும். அரச அதிபரும் பிரதேச செயலரும் இவ்
விடயங்களில் மத்தியின் முகவர்களாக செயற்படுவர். (இந்தியா ஜேர்மனி போன்ற
நாடுகளில் இவ்வாறான முறைமை உண்டு. இந்தியாவில் Collectors,
Sub-collectors, Tahsildar – GA, DS, GS க்கு சமமானவர்கள் – மானில
அரசின் நிர்வாக செயற்பாட்டிற்கு கீழேயே உள்ளனர், இவர்கள் மத்திய அரசின்
முகவர்களாகவும் செயற்படுகின்றனர்.)
8. இரண்டாவது சபை
சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக
புத்திஜீவிகள், துறைசார்ந்த நிபுணர்கள், கல்விமான்கள் உள்ளடங்கிய
இரண்டாவது சபை ஒன்று அமைதல் வேண்டும். இரண்டாம் சபை உறுப்பினர்
பெயர்ப்பட்டியல் அரசியலமைப்பு சபையினரால் சிபார்சு செய்யப்பட்டு மாநில
அலகுகளின் பிரதிநிதிகளாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் தெரிவு
செய்யப்படுவர். இவ்வாறான தெரிவில் சிறுபான்மை இனத்தவரைச் சேர்ந்தவர்கள்
இன விகிதாசார அடிப்படையில் தெரிவாவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இரண்டாவது சபையின் சிறுபான்மை இன உறுப்பினர்கள் சிறுபான்மை இனங்களின்
நலன் சார்ந்த மசோதாக்களை தீர்மானிக்கும் போது ‘சமபல வாக்களிப்புரிமையை’
கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
9. காணி
காணி பயன்பாடு தொடர்பான அதிகாரம் பிராந்திய அலகுகளுக்கு
உரித்துடையனவாக வேண்டும். கடலின் உயர் மட்டத்திற்கும் தாழ்
மட்டத்திற்கும் நடுவிலான இடைக்கரை (Foreshore)
மற்றும் சமுத்திர அடிநிலம் (Continental Shelf) உட்பட அரச காணிகளைப்
பின்வரும் நிபந்தனைகளுக்கமைய தொடர்ந்து பயன்படுத்தலாம்.
(I) மத்திக்குரிய விடயங்கள் தொடர்பான காணிகளை மத்தி தொடர்ந்து தனது
கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும்;.
(II) பிராந்திய அலகுகளுக்குரிய விடயங்கள் தொடர்பான காணிகளை பிராநதிய
அலகுகள்; தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும்.
(III) மாவட்டத்தில் உள்ள காணியற்றவர்களுக்கும் அடுத்ததாக மாகாணத்தில்
உள்ள காணியற்றவர்களுக்கும், அதன் பின் ஏனையோருக்கும் என முன்னுரிமை
அடிப்படையில் அரச காணிகளை வழங்குவது பற்றிய தேசியக் கொள்கை அமைதல்
வேண்டும்.
(IV) ஒதுக்கிய நிரல் தொடர்பான விடயம் ஒன்றில் அரச காணி தேவைப்படுமிடத்து
அத்தகைய காணி பயன்பாடு பற்றி பிராந்திய அலகுடன் கலந்தாலோசித்தே அரசாங்கம்
செயற்படல் வேண்டும்.
(V) பிராந்திய அலகின் விடயம் ஒன்றுக்கு தேவைப்படும் அவ்வலகிலுள்ள அரச
காணியை அரசாங்கம் ஒவ்வொரு பிராந்திய அலகுகளும் கிடைக்கப் பெறல் வேண்டும்.
(VI) அரச காணிகளை வழங்குவதில் மாகாணங்கள் கண்டிப்பாக தேசிய கொள்கைகளைப்
பின் பற்றுதல் வேண்டும்.
(VII) மகாணங்களுக்கிடையேயான நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பான குடியேற்ற
திட்டங்கள் யாவும் தேசிய கொள்கைக்கு அமைவாக மாகாணங்களால்
நிர்வகிக்கப்படும்.
(VIII) 1983ற்கு பின் வடக்கு கிழக்கில் நடைபெற்ற காணிப்பங்கீடுகள்
மீளாய்வு செய்யப்பட்டு அவ் வழங்கல்கள் தேசிய கொள்கைக்கு முரணானதாகக்
காணப்படின் அல்லது அத்துமீறாக கையகப்படுத்தப்பட்டிருப்பின் அது தொடர்பான
சட்ட நடவடிக்கை எடுக்க அரசியலமைப்பு ரீதியாக ஏற்பாடு வேண்டும்.
10. சட்டம். ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு
10.1 சட்டம், ஒழுங்கு மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்; பிராந்திய
அலகுகளுக்குரிய விடயமாதல் வேண்டும்.
10.2 பாதுகாப்பு படையினர் ஒவ்வொரு
பிராந்தியத்திலும்ஃமாவட்டத்திலுமுள்ள குடிப்பரம்பலின் அடிப்படையில் அப்
பிரதேசங்களில் நிலை கொண்டிருத்தல் வேண்டும்.
10.3 பாதுகாப்பு படையில் இனவிகிதாசாரம் பேணப்படல் வேண்டும்.
10.4 பாதுகாப்பு படையினர் வசம் இருக்கும் தனியார் காணிகள் யாவும்
மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
10.5 பெண்கள் சிறுவர்களுக்கெதிரான பாலியல் துஷ;பிரயோகம் மற்றும்
வன்முறைகளுக்கு கடுமையான சட்ட ஏற்பாடும் துரித நீதி வழங்கலுக்கான
முறைமையும் ஏற்படுத்தப்படல் வேண்டும்.
10.6 சட்டம் ஒழுங்கின் சுயாதீன செயற்பாடு உறுதிப்பபடுத்தப்படல் வேண்டும்.
11. மொழி
இலங்கை முழுவதிலும் தமிழும் சிங்களமும் அரச கரும மற்றும் நிர்வாக மொழியாக
இருத்தல் வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் நிர்வாக மற்றும்
ஆவணக்காப்பு மொழியாக இருத்தல் வேண்டும். ஏதேனுமொரு பிரதேச செயலாளர்
பிரிவில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழ் அல்லது சிங்கள மொழி பேசுவோர்
அப்பிரதேச செயலாளர் பிரிவில் சனத்தொகையில் 20 வீதத்திற்கு மேற்படின் அப்
பிரதேசத்திலுள்ள தேசிய மற்றும் பிராந்திய அரச நிறுவனங்களிலும்
உள்ளூராட்சி சபைகளிலும் பொது ஆவணங்கள் அம்மொழியிலும் பேணப்படல் வேண்டும்.
அரசியலமைப்பில் சொல்லப்பட்ட மொழிக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றாத
அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அரசியலமைப்பு
ஏற்பாடு வேண்டும்.
12. தேர்தல் முறை
12.1. தேர்தல் தொகுதி (FPP) 50%மற்றும் மற்றும் விகிதாசார பிரதி
நிதித்துவமுறை (PR) 50% ஆக உள்ள கலந்த ஒரு தேர்தல் முறை பாராளுமன்ற,
பிராந்திய அலகு மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறையாக அமைதல்
வேண்டும்.
12.2. இரண்டு வாக்குச் சீட்டு முறைமை பின்பற்றல் வேண்டும்.
தொகுதி வாரியான தெரிவுக்கு ஒரு வாக்குச்சீட்டும் விகிதாசார
பிரதிநிதித்துவ முறையிலான தெரிவிற்கு இன்னொரு வாக்கு சீட்டு முறையும்
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். (ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில்
இவ்வாறான முறைமை உண்டு.)
12.3 தேர்தல் மாவட்ட ரீதியாக பாராளுமன்ற உறுப்பினர்களின்
தொகையை கணக்கிடும்போது கடந்த மூன்று தசாப்தங்களாக வடக்கு கிழக்கில்
இயற்கை இறப்பு வீதத்துக்கு மாறாக நடந்த இறப்புக்கள் மற்றும் பொருளாதார
காரணிகளுக்கான இயற்கையான இடப் பெயர்வுகளை காட்டிலும் பாரியளவிலான
இடப்பெயர்வுகள் நடைபெற்றுள்ளமையாலும் அவற்றினையும் கவனத்தில் கொண்டு
தேர்தல் மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்கள்
தீர்மானிக்கப்படவேண்டும்.
12.4 சிறுபான்மையின் செறிந்து வாழும் கொழும்பு, கம்பஹா,
களுத்துறை, இரத்தினபுரி, புத்தளம், கண்டி, நுவரெலியா, பதுளை போன்ற
தேர்தல் மாவட்டங்களில் பல்லினத் தொகுதிகள் அமைய வேண்டும்.
12.5 இலங்கையர்கள் செறிவாக வாழும் வெளிநாடுகளில் அவர்கள்
வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.
12.6 ஜனாதிபதி மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படல் வேண்டும்.
12.7 இரண்டாவது சபை உறுப்பினர்களால் பிராந்திய சபை அலகு
உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படல்; வேண்டும்.
13. பெண்கள் இளைஞர் யுவதிகளின் பிரதிநிதித்துவம்
13.1 சகல வேட்பு மனுக்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம்
50% ஆக இருப்பது உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
13.2 உள்ளூராட்சி தேர்தல்களில் இளைஞர் யுவதிகளின் தெரிவு
குறைந்தது 25% ஆக இருப்பது உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
14. அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள்
14.1 இன ஐக்கியத்திற்கும் சமயங்களுக்கிடையிலான
புரிந்துணர்வுக்குமான (Commission for Ethnic and Religious Harmony)
ஆணைக்குழுவொன்று அமைக்கப்படல் வேண்டும். இவ்வாணைக்குழு இன மற்றும் சமய
ரீதியான பகைமையை தூண்டுபவர்களுக்கு எதிராக விசாரிப்பதற்கும், சட்ட
நடவடிக்கை எடுப்பதற்குமான அதிகாரம் உள்ளதாக இருக்க வேண்டும். ( இது போன்ற
ஏற்பாடு கயானா Gayana நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது.)
14.2 அரசியலமைப்பு பேரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள்,
மேன்முறையீட்டு நீதிமன்றம், மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில்
சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
15. பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுவலு திறன் உள்ளோர்
15.1 பெண்கள் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு
வாழ்வாதார உதவிகள் சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
15.2 மாற்று திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் சட்டரீதியாக
உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
16. காணாமற் போனோர், அரசியல் கைதிகள்
16.1 காணாமற் போனோர் விடயத்தில் உண்மை கண்டறியப்பட்டு
பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்க உறுதி செய்யப்படுத்தப்படுவதுடன்
அவர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடு
சட்டரீதியாக்கப்படல் வேண்டும்.
16.2 வருங்காலங்களில் காணாமற் போனோர் என்ற நிகழ்வு ஏற்படாமல்
இருப்பதற்கான சட்டரீதியான ஏற்பாடும் அதன் நடைமுறைப் படிமுறைகளும் உறுதி
செய்யப்படல் வேண்டும்.
16.3 அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான சட்ட
ஏற்பாடு கொண்டு வரப்படுதல் வேண்டும்.
17. நீதித்துறை
வழக்குகள் துரித கதியில் விசாரிப்பதற்கு ஏதுவான பொறிமுறையொன்று
உருவாக்கப்படுவதுடன், துரித நீதிச் சேவை வழங்கும் வகையில் நீதித்துறை
விஸ்தரிக்கப்படுவதற்கான அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடு செய்யப்படல்
வேண்டும்.
18. அரசியலமைப்பு செயற்பாடு
அரசியலமைப்பில் கூறப்படும் விடயங்களின் முழுமையான செயற்பாட்டை
கண்காணிப்பதற்கும் உறுதிப்படுத்தப்படுவதற்கும் ஓர் பொறி முறை
அரசியலமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்படல் வேண்டும்.