பழ ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் முல்லைத்தீவு பழம்பாசிக் கிராமத்தில் பழங்களைப் பொதிசெய்யும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11.01.2016) சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.
விவசாய அமைச்சு முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பழச்செய்கையை ஏற்றுமதி நோக்கில் ஊக்குவித்து வருகிறது. இளைஞர்களை ஒருங்கிணைத்து இளைஞர் விவசாயக் கழகம் உருவாக்கப்பட்டு, அதனூடாகப் பப்பாசிப்பழம் மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த எட்டுமாத காலங்களில் 45,000 கிலோ வரையான பப்பாசிப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டானில் பொதியிடல் வசதிகள் இல்லாததால், பழங்கள் தென்இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பொதிசெய்யப்படும் நடைமுறையே தற்போது உள்ளது. இதில் உள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டே, ஒட்டுசுட்டான் பழம்பாசியில் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் 4 மில்லியன் ரூபா நிதிக்கொடையில் பழப்பொதியிடல் நிலையம் உருவாக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திறப்பு நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் பொ.அற்புதச்சந்திரன், தெ.யோகேஸ்வரன், அஞ்சனா ஸ்ரீரங்கன், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோருடன் பழம்பாசி கிராம விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.
பப்பாசிப்பழத்தோடு எதிர்காலத்தில் கொய்யாப்பழங்களையும் ஏற்றுமதி செய்யும் நோக்கில் அரைக்கிலோ எடை அளவுக்குப் பெரியபழங்களை உருவாக்கும் தாய்லாந்துக் கொய்யா இனக்கன்றுகள் இந்நிகழ்ச்சியின்போது விவசாயிகளுக்கு விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.