Ad Widget

நாங்கள் சொந்த நிலத்திற்கே போக ஆசைப்படுகின்றோம்; மகஜர் கையளிப்பு

தங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்று கோரி வலி.வடக்கு மக்கள் மகஜர் ஒன்றினை யாழ். மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கி. கருணாகரனிடம் கையளித்துள்ளனர்.

யாழ். மாவட்ட அரச அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஆகிய இருவரும் வெளியில் சென்றுள்ளமையினால் குறித்த மகஜரை நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளித்துள்ளனர்.

tellippalai-magaer

இந்த மகஜரை பூந்தளிர் பெண்கள் அமைப்பின் யாழ். மாவட்ட தலைவி வழங்கி வைத்தார். இவருடன் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மகஜரில், நாம் கடந்த 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக வலி.வடக்கு மயிலிட்டிக் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் 24 வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம்.

யுத்தம் முடிந்து 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னமும் எனது சொந்த நிலத்தில் குடியமர்த்தாமை மிகவும் கவலையளிக்கின்றது.

எமக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணமும் தற்போது சொந்த நிலங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ளமையினால் தொழில் வாய்ப்பினை இழந்த எமக்கு எவ்வித அடிப்படை வாழ்வாதாரமும் இல்லாது பாரிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

மேலும் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், கலாச்சார ரீதியிலும் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் எனவே எங்களது சொந்த நிலங்களில் மீளக்குடியமர அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அந்த மகஜரில் கூறப்பட்டுள்ளது.

மகஜரைப் பெற்றுக் கொண்ட நிர்வாக உத்தியோகத்தர் தான் அரச அதிபரிடம் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

Related Posts