இலங்கை அரசின் அநீதிகளால் தமிழ், மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் கொதித்துப் போயுள்ளார்கள். இந்த அநீதிகளுக்கு எதிராக இன, மத பேதமின்றி நாட்டுமக்கள் அனைவரும் கிளர்ந்தெழும் காலம் விரைவில் வரும். இவ்வாறு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த தென்னிலங்கை சிங்கள மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் கருத்து வெளியிட்டனர்.
அரசினதும், அரச படைகளினதும் அச்சுறுத்தலுக்கு அஞ்சி நாம் ஆர்ப்பாட்டப் போராட்டத்தைக் கைவிடவில்லை. நீதிமன்றத்துக்கு மதிப்பளித்தே போராட்டத்தின் போக்கை மாற்றிக்கொண்டோம். ஆனால் எத்தகைய அச்சுறுத்தல்களையும் மீறி அநீதிகளுக்கு எதிரான போராட்டங்கள் எதிர்காலங்களில் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.
இலங்கை அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக தமிழ், சிங்கள மக்கள் இணைந்து போராடுவதைத் தடையுத்தரவுகளால் தொடர்ந்து தடுத்துவிட முடியாது. இன, மத பேதங்களைக் கடந்து தமிழர்களுக்கு இந்த அரசு அநீதி இழைக்கும் போது சிங்கள மக்களாகிய நாம் குரல் கொடுப்போம். எமக்கு ஆதரவாக குரல்கொடுக்க தமிழர்கள் தயாரக உள்ளனர் எனவும் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த சிங்கள மக்கள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் வைத்துக் கருத்துத் தெரிவித்தனர்.