சர்வதேச மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா புதிய கட்டுப்பாடு

அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளைத் தங்களுடன் அழைத்து வருவதைத் தடுப்பதற்கும், தற்காலிகமாக புலம்பெயர்ந்தோர் தமது வீசாக்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றுவதற்கான விதிமுறைகளை கடுமையானதாக மாற்றுவதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குடிவரவு கொள்கை மாற்றங்கள் குறித்து, அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டோனி பர்க் இத்தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, தற்போது சுமார் 300,000 ஆக உள்ள நிகர வெளிநாட்டுப் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை 2028 இற்குள் 225,000 ஆகக் குறைப்பதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறைகளின் படி, சர்வதேச மாணவர்களின் கணவன் அல்லது மனைவி அவுஸ்திரேலியாவில் குறிப்பிட்ட மணித்தியாலங்கள் பணியாற்ற அனுமதியுள்ளதுடன், 18 வயதிற்குட்பட்ட சார்ந்திருக்கும் பிள்ளைகளையும் அழைத்து வர முடியும். புதிய கட்டுப்பாடுகளின் மூலம் இந்த அனுமதிகள் நிறுத்தப்படவுள்ளன.

கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் 2022 பெப்ரவரியில் எல்லைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்ததோடு, 2023 ஆம் ஆண்டில் அதன் உச்ச கட்டமாக 518,000 ஆகவும், 2024 இல் 429,000 ஆகவும் இருந்த இந்த எண்ணிக்கை, 2025 ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டில் 306,000 ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக இப்புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

Related Posts