காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல் போயிருந்தார்.
இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பதுளை – மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து வைத்தியரின் கார் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைவாக, காணாமல் போன வைத்தியரைத் பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் அவரது சடலம் மஹியங்கனை – மாப்பாக்கடவெவ பகுதிக்கு அருகிலுள்ள பாறையொன்றில் வைத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.