பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பதுளை – மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து வைத்தியரின் கார் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைவாக, காணாமல் போன வைத்தியரைத் தேடும் நோக்கில் இன்றைய தினம் அப்பகுதியில் பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.