நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தனியார் வைத்தியசாலைகள்!!

காலாவதியான இரசாயனப் பொருட்கள், தடுப்பூசி ஊசிகள் பயன்பாடு மற்றும் அதிகக் கட்டணம் வசூலித்தமை தொடர்பில் கேகாலையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 520,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் விதிகள் மற்றும் கட்டளைகளைக் கடுமையாக மீறிய குற்றத்திற்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) கேகாலை மாவட்ட விசாரணை அதிகாரிகளினால் இந்த வைத்தியசாலைக்கு எதிராக கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் கடந்த ஜூலை 24ஆம் திகதி குறித்த வைத்தியசாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது பின்வரும் சட்டவிரோத நிலைமைகள் கண்டறியப்பட்டுள்ளன:

FBC (Full Blood Count) இரத்தப் பரிசோதனைக்காக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் விதிக்கப்பட்ட 400 ரூபா கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக, நோயாளி ஒருவரிடமிருந்து 500 ரூபா கட்டணம் அறவிடப்பட்டிருந்தமை.

வைத்தியசாலை ஆய்வகத்திற்குள் காலாவதியான HCV Rapid Test Cassettes அட்டைகள் 20 மற்றும் Clinical System Analyzers-க்கான காலாவதியான இரசாயனப் பொருட்கள் (System Cleaning Solution & Acid Solution) சேமித்து வைக்கப்பட்டிருந்தமை.

வைத்தியசாலையின் மருந்தகத்திற்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏனைய பொருட்களுடன், காலாவதியான 23 UNOLOK Single use HYPERMIC Needles ஊசி அட்டைகள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை.

இந்த வழக்கு கடந்த 06ஆம் திகதி கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான வைத்தியசாலை நிறுவனம் தன் மீதான 3 குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

இதற்கமைய, விடயங்களை ஆராய்ந்த நீதவான், சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்கு 520,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் உயிருக்கு நேரடியாக அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் காலாவதியான மருந்துகள், இரசாயனப் பொருட்கள் அல்லது மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தும் மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் இவ்வாறான தனியார் வைத்தியசாலைகள் அல்லது ஆய்வகங்கள் பற்றிய தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு உடனடியாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

Related Posts