அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் இயங்குநிலை வானிலை நிலைமை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்றிலிருந்து (10) மு.ப 07.00 மணி முதல் நாளை (11) மு.ப 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.

இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான, அதேபோல் காலியிலிருந்து மாத்தறை வரையிலான ககரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அதனுடன் சேர்ந்து அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும்.

இதன் காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானத்துடன் இருக்குமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகத்தினர் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Posts