கனேடிய யுவதி 35 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 352.65 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனேடிய யுவதி ஒருவர் இலங்கைச் சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் (NCU) கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளரும் அதன் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்தார்.

நேற்று (23) இரவு 10.40 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK 648 எனும் விமானம் மூலம் அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

கனடாவின் டொராண்டோ நகரில் இருந்து துபாய் ஊடாக வருகை தந்த குறித்த யுவதியின் 2 பயணப் பொதிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதற்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 35.265 கிலோகிராம் ‘ஹஷிஷ்’ (Hashish) போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளளது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் ரூ. 352.65 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான யுவதி மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளைச் சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

Related Posts