இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு இன நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு கோரி ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கிருளப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையிலும், சமூகங்களுக்கிடையிலான அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிராகத் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.