இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில், 72 நாட்களாக நடைபெற்ற அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 300-ஐத் கடந்துள்ளது.

செம்மணி சித்துப்பதிப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட 302 மனித எலும்புக்கூடுகளில் 298 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு வருடத்திற்கும் மேலாக அகழ்வாய்வைக் கண்காணித்து வரும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
புதைகுழியில் அகழ்வாய்வின் 72-வது நாளான நேற்று (ஜூன் 7), மேலும் எட்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அவற்றில் இரண்டு சிறுவர்களுடையது என அவர்கள் மேலும் தெரிவித்தனர். நேற்று கண்டறியப்பட்ட 6 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 302-ஆக அதிகரித்தது.
மனிதப் புதைகுழியின் மேலதிக அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளமையை தொடர்ந்து, ஏழு மாதங்களின் பின்னர் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் 2026 ஏப்ரல் 27 திங்கட்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமாகின.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ச்சியாக 12 நாட்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அகழ்வாய்வுப் பணியாளர்களுக்கு ஓய்வு வழங்குவதற்காக மே 9 சனிக்கிழமை அன்று பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போது 261 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. மூன்று வார கால ஓய்வின் பின்னர், இதன் அகழ்வாய்வுப் பணிகள் மீண்டும் 2026 ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகின.
நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் முதன் முதலாக 2025 மே 15 ஆம் திகதி ஆரம்பமாகின.
மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளுக்கு மேலதிகமாக, கண்டெடுக்கப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட பிற பொருட்களில், குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களின் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயங்களும் அடங்குகின்றன.