பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் உள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச்சாலையை மூடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று (20) காலை நடைபெற்றபோதே குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் கனரக வாகனங்கள் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் காலை 6:45 மணி முதல் 8 மணி வரையும், பாடசாலை முடிவடையும் நேரத்தில் பகல் 12 மணி முதல் 2 மணி வரை பயணிக்க தடை விதிப்பது…
புதிய ஜேசிபி இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்வது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அனல் ரெஜி கொண்டுவந்த தீர்மானம் அதன் தேவைப்பாடு தொடர்பான ஆய்வுக்கு பின்னர் அடுத்த கூட்டத்தில் ஆராய்வது…
மரக்கறி சந்தை மீண்டும் நவீன சந்தை தொகுதிக்கு மாற்றப்பட்டமையால் ஏற்கனவே குத்தகைக்கு வழங்கப்பட்டவருக்கு வழங்குவது…முனையில் அமைந்துள்ள சிறுவர் மகிழ்வகத்திற்கு வருகை தருவோர்க்கு ரூபா 20/- பணம் பரீட்சார்த்தமாக 3 மாதம் வரை அறவிடுவது…
மகிழ்வகம் காலை 9:00 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையும் திறப்பது…முனை வெளிச்ச வீடு திருத்தப்பட்டு பார்வையாளர்களிடமிருந்து கட்டணம் அறவிடுவது…
இடையூறாக நிறுத்தப்படும் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊர்திகளுக்கு உடனடி தண்டமாக ரூபா 2000/- அறவிடுவது…
நகரசபை விதிகளை மீறி வியாபாரதில் ஈடுபடுவோர்க்கும், மரக்கறி சந்தையிலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் மரக்கறி மற்றும் சந்தை பொருட்கள் விற்பனை செய்வோர்க்கும் ரூபா 2000 தண்டம் அறவீடு செய்வது, சட்ட நடவடிக்கை எடுப்பது…
கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பது, நகர சபை எல்லைக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதை ஊக்குவிப்பது…
இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள நிலையில் இராணுவத்தின் சிற்றுண்டி சாலையில் புகைத்தல் விற்பனை செய்வதை தடை செய்வது…
குறித்த இராணுவம் நகரசபை சட்டங்களுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெறப்படாது இயங்குவதால் அதற்கான உரிய அனுமதி பெறப்படவில்லை எனில் அந்த இராணுவ சிற்றுண்டிச்சாலையை மூடுவது போன்ற தீர்மானங்கள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆண்டுக்கான புதிய நிதிக் குழு, சுகாதாரக் குழு, பெறுகை குழு உட்பட பல குழுக்களும் தெரிவு செய்யப்பட்டன.
அமர்வில் 15 உறுப்பினர்கள் உள்ள சபையில் 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.