நாட்டின் பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (18) முதல் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் விளியின் தரச் சுட்டெண் (AQI) 150 முதல் 200 வரை இருப்பதாக அஜித் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வளி மாசு சற்று ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வளியின் தரம் மோசமடைவதற்கு எல்லை தாண்டிய வளி மாசுபாடும் ஒரு காரணம் எனவும், இது மாசுபட்ட வளியின் தேசிய எல்லைகளுக்கு அப்பால் செல்வதால் ஏற்படுகிறது.
வளியின் தரத்தில் ஏற்படும் இந்த வீழ்ச்சி உணர்திறன் மிக்க நபர்களை மோசமாக பாதிக்கக்கூடும் எனவும், சுவாசக் கோளாறுகள் அல்லது ஒவ்வாமை எதிர்விளைவுகளை சந்தித்தால் உடனடியாக மருத்துவ உதவியை பொதுமக்கள் நாடவேண்டும்.
திறந்த வெளியில் எரியூட்டல் மற்றும் வாகன புகை ஆகியன வளி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.
எனவே, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபை நாட்டின் வளியின் தரச் சுட்டெண் மற்றும் வளிமண்டல நிலைமைகளை சரியான நேரத்தில் வழங்க தொடர்ந்து கண்காணித்து வருகிறது.