Ad Widget

யாழ். பல்கலை. ஆளணிக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க ஜனாதிபதி சிறப்பு ஒப்புதல்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் ஆயிரத்து 600 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ச சிறப்பு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை, 3ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழக ஆளணியருக்கு சினோபாம் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இந்தத் தகவலை பல்கலைக் கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவரும் வகையில் பல்கலைக்கழக ஆளணியில் உள்ள சகலருக்கும் கோவிட்-19 தடுப்பசிகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேநேரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆயிரத்து 600 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பிய கோரிக்கை நேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

அனைத்து பல்கலைக்கழகப் பணியாளர்களையும் குறிப்பிட்ட திகதிகளில் வந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கேட்கப்பட்டுள்ளது.

Related Posts