தமிழ் பேசும் வேட்பாளருக்கு வாக்களிப்பது அல்லது தேர்தலை புறக்கணிப்பது மறைமுகமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதற்கு சமமாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அம்பாறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை உண்மையாக துறந்தாரா என்பது கேள்விக்குரிய விடயமே.
அப்படியான ஒருவரை நாம் தோற்கடிக்க வேண்டுமென்றால் அன்னச் சின்னத்துக்கு நேரே ஒரு புள்ளடியிட்டு சஜித் பிரேமதாசவை வெற்றியடையச் செய்ய வேண்டும்
அதைவிடுத்து சிலர் கூறுவது போல தமிழ் பேசும் வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலமோ அல்லது தேர்தலை புறக்கணிப்பதன் மூலமோ அது முடியாது. அவ்வாறு செய்தால் அது மறைமுகமாக கோட்டாபயவிற்கு வாக்களிப்பதற்கு சமமாகும்.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக மாற்றுங்கள். அவர் கூறியவற்றை செய்ய வைக்கும் முழுப்பொறுப்பையும் நாங்கள் ஏற்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.