வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் இன்னும் 80 சதுர கிலோமீற்றர் அளவிலான பகுதிகளில் கண்ணிவெடிகள் உள்ளன என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவுக்கு வந்த போது வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் 5,000 சதுர கிலோமீற்றருக்கும் அதிகளவான பிரதேசங்களில் கண்ணிவெடிகள் இருப்பதாக கணிப்பிடப்பட்டது.
அதில் அதிகளவும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அதாவது உடல்ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் கண்ணிவெடிகள் இருந்த 2,064 சதுர கிலோ மீற்றர்க்கும் அதிகளவிலான பரப்பளவு அடையாளம் காணப்பட்டு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன.
கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் மாத்திரம் மேற்கொள்ளப்படவில்லை. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள கண்ணிவெடி அகற்றும் அதிகாரியின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டன என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இந்த பணிகளில் இராணுவத்தினருடன், கண்ணிவெடி அகற்றும் அதிகாரியின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசார்பற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன.
ஏனைய நாடுகளில் யுத்தம் நிறைவுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகியும் முற்று முழுதாக கண்ணிவெடிகள் அகற்றப்படாத நிலை காணப்படுகின்ற போதும் இலங்கையில் பாரியளவிளலான பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் விரைவாக முன்னெடுக்கபட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.