நயினாதீவு நாகதீப விகாரைக்கு முன்பாக அமைக்கப்படவிருந்த 75 அடி புத்தர் சிலையின் நிர்மாணிப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேற்படி புத்தர் சிலை அமைப்பதற்கு யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்த புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கு கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர், ஆலோசனை வழங்கியதையடுத்தே இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
சுமார் 120 மில்லியன் ரூபாய் செலவில் நாகவிகாரைக்கு நேராக, இறங்குதுறைக்கு தெற்காக கடலின் நடுவில் இந்தப் புத்தர் சிலை அமைப்பதற்கான பணிகள், அண்மைக்காலமாகக் கடற்படையின் உதவியுடன் விகாரதிபதி நவதகல பதுமகித்தி தேரர் மேற்கொண்டார்.
சிலை அமைப்பதற்கான அத்திவாரம் இடும் பணியானது, கடற்படையின் பாதைகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான அடிக்கல்லை, புத்தசாசன மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, சில மாதங்களுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.