Ad Widget

500 நாட்களாக தொடரும் போர்: உக்ரைனின் இராணுவ வளங்கள் குறித்து ரஷ்யா வெளியிட்ட தகவல்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடங்கிய போர் 500 நாட்களை கடந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் இராணுவ வளங்கள் ஏறத்தாழ தீர்ந்துவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார்.

மாஸ்கோவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பேசியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

“மேற்கு நாடுகளின் (அமெரிக்கா, ஐரோப்பா) ஆயுத உதவி இருந்தபோதும் உக்ரைனால் எங்களை தோற்கடிக்க முடியவில்லை.

சமீபத்திய நிகழ்வுகள் உக்ரைனிடமிருந்த இராணுவ வளங்கள் கிட்டதட்ட முடிவடைந்ததை எங்களுக்கு காட்டுகின்றன” என்று கூறியுள்ளார்.

சோவியத் ரஷ்யாவை எதிர்க்க 1949ம் ஆண்டு அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ‘நேட்டோ’ சோவியத் வீழ்ந்த பின்னரும் இந்த அமைப்பு கலைக்கப்படாமல் தொடர்ந்தது. ரஷ்யாவின் முன்னாள் நாடான உக்ரைனையே நேட்டோ தனது வசம் கொண்டு வந்துவிட்டது.

இதுதான் தற்போதைய போருக்கு முக்கிய காரணம். ரஷ்யா உலகின் மிகப்பெரிய நாடாக இருந்தாலும் அந்த நாட்டுக்கே கணிசமான அளவில் தானியம் உக்ரைனிலிருந்துதான் போகிறது.

நேட்டோ வந்துவிட்டால் அமெரிக்காவின் படைகள் ரஷ்யாவின் பக்கத்திலேயே நிலை நிறுத்தப்படும். ஏற்கெனவே ரஷ்யாவும்-அமெரிக்காவும் எதிரிகள்.

இந்த போர் காரணமாக 60 லட்சத்திற்கும் அதிகமான உக்ரைனியர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 9,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

15,700க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் நேட்டோவிலிருந்து விலகுவதாக உக்ரைன் அறிவிக்கவில்லை.

ரஷ்யாவும் தாக்குதலை நிறுத்தவில்லை. இந்நிலையில், உக்ரைன் திடீரென பதில் தாக்குதலில் ஈடுபட்டது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது அதிரடியாக ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

அதேபோல கருங்கடல் பகுதியில் இருந்த ரஷ்ய கப்பல்கள் மீதும் சில எதிர்பாராத தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த சூழலில் உக்ரைனின் ராணுவ வளங்கள் அனைத்தும் ஏறத்தாழ அழிக்கப்பட்டுவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார்.

Related Posts