48 அத்தியவசிய மருந்து வகைகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள உயர்ந்தபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.
உத்தியோகபூர்வ கட்டுப்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கு அமைய மருந்து வகைகளின் விலைகள் நிர்ணயிக்கப்படவுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்தார். ஏனைய மருந்து வகைகள் விலைகளும் படிப்படியாக குறைக்கப்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேராசிரியர் சேனக்க பிபிலே ஒளடத கொள்கைக்கு அமைய இலவச சுகாதார சேவையை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தடுப்பூசி முதல் இருதய மற்றும் மூளை அறுவை சிகிச்சைகளுக்கான இலவச சேவைகள் வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
மருந்து வகைகளின் பெயர்கள் சட்ட வரைவு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. உரிய மருந்து வகைகள் குறிப்பிட்ட சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது பற்றி கண்டறிவதில் நுகர்வோர் சேவைகள் அதிகார சபை, சுகாதார திணைக்களம் என்பனவற்றின் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்றும் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்தார்.