யாழ். மாவட்டத்தில் இயங்கி வந்து மூடப்பட்டிருந்த 59 ஐஸ்கிறீம், பழரச உற்பத்தி நிலையங்களில் 38 நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், இன்று (15) தெரிவித்தார்.
தமது அடிப்படை சுகாதார திருத்தங்களை மேற்கொண்ட 32 ஐஸ்கிறீம், பழரச உற்பத்தி நிலையங்களுக்கு கடந்த வாரமும் மேலும் 6 நிலையங்களுக்கு வெள்ளிக்கிழமையும் (14) அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் பல நிலையங்கள், தமது அடிப்படை திருத்த வேலைகளை பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடிப்படை திருத்த வேலைகள் பூர்த்தி செய்யப்படுமிடத்து அடுத்த வாரமளவில் அவற்றிற்கும் அனுமதி வழங்கப்படும்.
சில நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந் நிலையங்கள் தமது திருத்த வேலைகளை பூர்த்தி செய்தபின் நீதிமன்றின் அனுமதியுடன் மீள இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படும்.
ஏனைய ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தி நிலையங்களும் தத்தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் ஆலோசனைப்படி உடனடியாக செய்ய வேண்டிய அவசர திருத்த வேலைகளை பூர்த்தி செய்தால் அவற்றை மீள இயங்குவதற்கு அனுமதி வழங்க தயாராக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்தி