Ad Widget

37 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட 37 இந்திய மீனவர்களை, எதிர்வரும் மே 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, நேற்று புதன்கிழமை (29) உத்தரவிட்டார்.

தமிழக மாநிலத்தின் நாகப்பட்டினம், அக்கரைபேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சேர்ந்த 37 இந்திய மீனவர்களை ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி, பருத்;தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்த இலங்கை கடற்படையினர் 5 விசைப்படகுகளையும் கைப்பற்றினர்.

மீனவர்கள் அனைவரும் கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் யாழ் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நீரியல் வளத்துறை அதிகாரிகள், பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோது, அவர்களை நேற்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போதே மீனவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related Posts