37 பேர் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ள ஆணைக்குழு இணக்கம்

missing_people_enquiry_0051983ஆம் ஆண்டு முதல் காணாமல் போன 37 முஸ்லிம்கள் தொடர்பான விசாரணைகளை புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என சிவில் சமூகத்தின் தலைவர் முகமட் அஜ்மல் தெரிவித்தார்.

இது தொடர்பில் யாழ். முஸ்லிம் மீள்குடியேற்ற சிவில் சமூகத்தினால் நேற்று விடுக்கப்பட்ட கோரிக்கையினை காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹம ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் வாரங்களில் அதற்கான நடவடிக்கைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் சாட்சியமளிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஆணைக்குழுவின் தலைவர் எமக்கு உறுதியளித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேற்படி 37 பேரில் எட்டுப் பேர் ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் சமாதான காலத்திலும் மிகுதியானவர்கள் யாழ்.மாவட்டத்தில் வைத்தும் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடத்தப்பட்டவர்களில் மூன்று பேரினை இராணுவத்தினர் கடத்தியதிற்கான சான்றுகள் தம்மிடம் இருப்பதாகவும் மிகுதியானவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என வெள்ளை வானிலும் கப்பங்கள் பெறுவதற்காக இயக்கங்களும் கடத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.