Ad Widget

24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவில் விருத்தியடையும் சூறாவளி – மழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று வட அகலாங்கு 12.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.5நு இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.

அது வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடா கடற்பரப்பின் மத்திய பகுதிக்கு மேலாக ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் அது டிசம்பர் 4ஆம் திகதியளவில் வட ஆந்திரப் பிரதேசம் மற்றும் தென் ஒடிஷா கரையை அண்மித்த மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக ஆழம் கூடிய மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவான மழை பெய்யும் எனவும் அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Related Posts