20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வாரம் இடம்பெறவுள்ள கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தங்கள் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல பத்திரம் ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் வர்த்தமானியில் வெளியிடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, 20ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற நிலையில் திருத்த வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
எனினும் 20ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.