Ad Widget

14ஆம் திகதி அனைவரையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!

இன அடக்குமுறைக்கெதிராக போராடுவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்த தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது,

தமிழர் தேசத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும் பொருட்டு புதிய சிங்களக் குடியேற்றங்களும், விகாரைகளும் மிக வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

தமிழர் தாயகத்தில் சகல மாவட்டங்களிலும் பெரிய, சிறிய விகாரைகள் பல அமைக்கப்பட்டு வருவதுடன், வீதி முடக்குகள் மற்றும் சந்திகளிலும் புத்தர் சிலைகள் பிரதிஸ்டை செய்யும் பணிகளும் நடைபெறுகின்றது.

திருக்கேதீஸ்வரம் முகப்பில், கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் கோவில் அருகில் திருக்கோணேஸ்வரர் கோவில் முகப்பில், கன்னியா வெந்நீரூற்றில், சாம்பல் தீவில், மாங்குளம், கனகராயன்குளம் மற்றும் சேமமடு பகுதிகளில் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலை வைப்புக்களும் இடம்பெற்று வருகின்றது.

மேலும், தமிழ் மக்களின் கலாசார தலைநகரம் யாழ்ப்பாணத்தில் நயினை நாகபூசணி அம்மன் கோவிலுக்கு முன்பாக 67 அடி உயரமான புத்தர் சிலையொன்றை நிர்மாணிப்பதற்கும் கடற்படையினர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசத்தினுடைய மொழி, மத, கலாசாரங்களை அழிக்கின்ற ஒரு செயற்பாடாகவே நாம் இதனைக் கருதுகின்றோம். இதேபோல் புதிய புதிய சிங்களக் குடியேற்றங்களும், இராணுவக் குடியிருப்புக்களும், தமிழர் தாயகத்தின் சகல இடங்களிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் வெற்றிகரமாக பல தசாப்தங்களாக மேற்படி சிங்கள பௌத்த மயமாக்கல் வேலைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வந்துள்ள நிலையில் தற்போது வடமாகாணத்திலும் இவ்வாறான புதிய சிங்கள குடியேற்றங்களும், இராணுவக் குடியிருப்பும், யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளன.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கக் கூடிய இத்தகையை நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும். தமிழ் மக்கள் முழுமையாக மீளக் குடியேறக்கூடிய வகையில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும்.

மற்றும் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேறுமாறும், தமிழின அழிப்பிற்கான பொறுப்புக் கூறலுக்காக ஒரு முழு அளவிலான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்குமாறும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவும் கோருகின்றோம்.

சர்வதேசத்தின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனையை தீர்ப்பதாக கூறி அரசியலமைப்பை மாற்றவுள்ள இவ்வேளையில் ஐ. நா கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் இவ்வேளையில் அதற்கு வலுச் சேர்க்கும் முகமாக, சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஒருமித்த குரலில் உரக்கக்கூற தமிழர்களாகிய நாம் எந்தக் கட்சி பேதமின்றி ஒற்றுமையாய், ஒரு குரலில் எடுத்துக் கூறுவோமாக.

இதற்காக இதே கோஷத்துடன் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்றுத் தமிழ் மக்களின் பிரநிதிகளாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்காலத்தின் தேவையாகிய இப்பேரணிக்கு தங்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டி எம்மக்களுடன் தோளுடன் தோள் நிற்குமாறு பகிரங்கமாக அழைத்து நிற்கின்றோம்.

குறிப்பாக நாம் என்றும் தொடர்பிலிருக்கும் மாவை சேனாதிராஜா அவர்கள் தலைமை தாங்கும் தமிழரசுக் கட்சியையும் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் ரெலோக் கட்சியையும், ஏற்கனவே எம்முடன் இணைந்து இப்பேரணியை ஏற்பாடு செய்யும் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல் .எவ், புளொட் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பவற்றுடன் இணைந்து ஒற்றுமையாய், ஒரே குரலில் தமிழ் மக்களின் குரலை ஒலிக்கச்செய்ய வரும்படி பகிரங்கமாகவும், மிகவும் அன்புரிமையுடனும் வேண்டி நிற்கின்றோம்.

இதன்மூலம் நாம் இனங்களுக்கிடையிலான உண்மையான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதுடன் ஒரு நீண்டகால நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பது ஒரு வெளிப்படையான உண்மையே.

இந்தப் பேரணிக்கு அனைத்து அரசியல் கட்சிகளையும், அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் அனைத்துத் தமிழ் மக்களையும் எம்முடன் இணைந்து ஒரே குரலில் ஒலிக்க கைகோர்க்கும்படி வேண்டி நிற்கின்றோம் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts