Ad Widget

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி – 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும் பலமான காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேநேரம் நான்கு மாவட்டங்களுக்கு தற்போது மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று மதுரங்குளி, தல்கஸ்வெவ, ஹுனுகல்லேவ, மன்னம்பிட்டி மற்றும் கல்குடா ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts