எதிர்வரும் பத்து வருடங்களுக்குள் நாட்டின் தென்னை உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரிக்க வேலைத் திட்டங்களை தாம் ஆரம்பித்துள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் இரண்டாவது முக்கோண தென்னை பயிர்ச் செய்கை வலயத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தென்னை அபிவிருத்தி விரிவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் இருநூறு மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி இந்த முக்கோண தென்னை பயிர்ச்செய்கை வலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உபாலி அமரசிங்க தலைமையில் இத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றதுடன், தெங்கு அதிகார சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த விசேட கண்காட்சி ஒன்றையும் அமைச்சர் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
மேலும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில், கைத்தொழில் உபகரணங்கள் மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் லக்ஸ்மன் வசந்தபெரேரா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அரச அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.