Ad Widget

1 ½ இலட்சம் இராணுவத்தினர் உள்ள இராணுவ அரணுக்குள் போதைப்பொருள் வந்தது எவ்வாறு?

‘சுமார் 1 ½ இலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடமாகாணத்தில் எவ்வாறு போதைப்பொருள் பாவனை என்ற புற்றுநோய் வேகமாக பரவியது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்’ என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தால் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கி நேற்று செவ்வாய்க்கிழமை (03) நடத்தப்பட்ட ஊழியர்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ‘2009ஆம் ஆண்டுக்கு முன்னர் போதைப் பொருள் பாவனையென்பது முற்றுமுழுதாக இல்லாத மாவட்டமாக எமது வடமாகாணம் திகழந்தது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சில விநியோகஸ்தர்களின் செயற்பாட்டால் அதிகரித்த போதைப்பொருள் பாவனை, இன்று போதைபொருள் பாவனையில் முதன்மை மாவட்டமாக மாற்றியுள்ளது’ என்றார்.

மேலும், ‘தமிழ் இனம் முன்னர் பண்பாடுடைய சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது, பண்பாடற்று இருக்கின்ற சமூகமாக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கமர்த்தல், வன்புணர்வுகள்; என்பன அதிகரித்துள்ளன. நாம் என்பதை மறந்து நான் என்று வாழ்வதால் ஏற்பட்ட விளைவுகளே இதற்கான காரணங்கள் ஆகும்’ என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், ‘போதைப்பொருள் குற்றச் செயல்கள் தனியொருவரால் மேற்கொள்ள முடியாது. அதிகாரத்திலுள்ளவர்களின் அந்தரங்க சார்பு அனுசரணையில் இடம்பெறுகின்றது. மக்களுக்காக வருந்தாது, சுயஇலாபத்துக்காக அதிகாரத்திலுள்ளவர்கள் செயற்படுவதால் சமூகம் சீரழிகின்றது. மாணவர்களிடையேயான போதைப்பொருள் பாவனையானது அச்சுறுத்தும் விடயமாக மாறியுள்ளது. கல்வியில் மேம்பட்ட எமது தமிழ்ச் சமூகத்தை அழிப்பதற்கு திரைமறையில் நாடகங்கள் நடைபெற்று வருகின்றன’ என்றும் சி.வி.குறிப்பிட்டார்.

இதேவேளை, 1974ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையில் சிறப்பாக இயங்கி வந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்துக்குள் 2009 மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

‘2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலங்களில் உள்நுழைந்த அரசியல் தலையீடுகளால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிர்வாக சீர்கேடுகள், முறையற்ற நியமனங்கள், நிதி நிர்வாக துஷ்பிரயோகங்கள் என்பன புற்றுநோயாக பரவியுள்ளன.

கூடவே, மாணவர் சமூகத்தின் ஒழுக்கமற்ற தன்மையும் ஏற்பட்டது. இதனை மாற்ற வேண்டியுள்ளது. கல்வியில் மேம்பட்டவர்கள் விரிவுரையாளர் பதவி கிடைக்காமையை இட்டு மனம் வருந்தி வருகின்றனர். பல மாணவர்கள் இதனால் அடைவ மட்டம் பெறத்தவறியுள்ளனர்;’ என்றார்.

‘மாணவர்களிடம் இரக்கும் ஒழுக்கம், கற்கை, எதிர்பார்ப்பு மனோநிலை ஆகியன வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மாணவர்களிடம் சீரற்று இருந்தால் அது தமிழ் இனத்தைப் பாதிக்கும் விடயமாக மாறிவிடும்’ என்றார்.

Related Posts