வடமாகாண அதிபர்கள் சங்கத்தின் ‘அதிபர்கள் சங்மம் 2015’ கலந்துரையாடல் யாழ்ப்பாணம் ரில்க்கோ விருந்தினர் விடுதியில் வடமாகாண அதிபர்கள் சங்கத்தலைவர் க.சிவநேஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், வடமாகாண பாடசாலைகளில் கல்வியில் நடைமுறை ரீதியில் காணப்படும் குறைபாடுகள், தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிபர்களுடைய கௌரவத்துக்குரிய மதிப்புக்கள் வழங்கப்படவேண்டும். அதிபர் பதவி வெற்றிடங்கள் ஏற்படும் போது ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு உரிய காலத்தில் வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும்.
அதிபர் இடமாற்றம் இடம்பெறும் போது உரியமுறையில் ஏற்படுகின்ற வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும். பாடசாலைகளின் தரங்களை அடிப்படையாகக் கொண்டு அதிபர் பதவிக்குரிய நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆசிரிய இடமாற்றத்தின் போது உரியமுறையில் இடமாற்ற நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டு வருட இறுதியில் பட்டியல் தயார்படுத்தப்பட்டு வருட ஆரம்பத்தில் இடமாற்றங்கள் வழங்கப்படவேண்டும்.
செயலமர்வுகளில் பங்குபற்றுபவர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட வேண்டும் செயலமர்வுகள் பொருத்தமான வகையில் பொருத்தமான காலப்பகுதியில் இடம்பெற வேண்டும். விளையாட்டு போட்டிகளுக்கான நடுவர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளமையால், பாடசாலை அதிபர் நிதிப் பற்றாக்கறைக்கு உள்ளாகின்றார்கள் இதற்கான நிதியினை பெற்றுக் கொள்வதற்க்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
பாடசாலைகளுக்கிடையிலான வளப்பங்கீடு பாடசாலையின் தேவை, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருத்தமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடசாலை நிதி முகாமைத்துவத்தை கையாள்வதற்கு பாடசாலைகளுக்கு முகாமைத்துவ நிதி உதவியாளர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் பரம்பலுக்கு ஏற்ப பாடசாலைகளின் தரங்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் எண்ணிக்கைகள் வரையறுக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் பொருத்தமான பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவேண்டும்.
கா.பொ.உயர்தர வகுப்புகள் காலம் தாழ்த்தி ஆரம்பிக்கப்படுவதால் மாணவர்கள் ஒழுக்கப் பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இதற்கு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
மாணவர்கள் அதிகளவு நேரம் தனியார் கல்வி நிலையங்களில் நேரத்தை செலவிடுவதனால் ஒழுக்கப் பிறழ்வு ஏற்படுகின்றது. அதற்குரிய மாற்று எற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவர் ஒழுக்கம் சார்ந்து பொதுவான நடைமுறை பின்பற்றப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
இக்கோரிக்கைகள் ஆவணமாக தயாரிக்கப்பட்டு வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
நிகழ்வில் அதிபர்கள் சங்கமம் நூல் வெளியீடு செய்யப்பட்டது. நூலை வடமாகாண அதிபர் சங்கத்தலைவர் எஸ்.சிவநேஸ்வரன் வெளியிட்டு வைக்க வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜா பெற்றுக்கொண்டார்.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், வடமாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் ந.தெய்வெந்திராஜா, தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் செ.அன்ரன் சோமராஜா, மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.எம்.ஷியான், துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜ.லூட்ஸ் மாலினி வெனிற்றன், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சி.நந்தகுமார், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆ.ஐ.குரூஸ், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன்ஸகுயின்ரஸ், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் திரமதி உ.முனீஸ்வரன், வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் வ.ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.